கோவாவில் தலைமறைவாக இருந்த காஞ்சிபுரம் ரவுடிகள் கூண்டோடு கைது
தலைமறைவாக இருந்த வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் கூண்டோடு கோவாவில் கைது செய்யப்பட்டதாக டிஐஜி கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர் ரவுடி ஸ்ரீதர். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, உள்பட பல்வேறு வழக்குகள் இருந்தன. மேலும், இவர் பல்வேறு ரவுடிகளை கூட்டாளியாக வைத்து கொண்டு தொழிலதிபர்கள் உள்பட பலரை மிரட்டி பணம் பறித்து வந்தார்.
ரவுடி ஸ்ரீதரை கைது செய்ய காஞ்சிபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். உடனடியாக போலீசார் ஸ்ரீதரை பிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதையறிந்த ஸ்ரீதர், கம்போடியா நாட்டிற்கு தப்பி சென்றதாகவும், போலீஸ் அவரை நெறுங்குவதற்குள் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரவுடி ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் மத்தியில் அவரது இடத்தை பிடிப்பதில் ரவுடிகளுக்கிடையே போட்டா போட்டி ஏற்பட்டது. இதில் ஸ்ரீதரின் கார் டிரைவர் தினேஷ், ஸ்ரீதரின் உறவினர் தணிகா, பொய்யாக்குளம் தியாகு ஆகியோர் தனிக்குழுக்களாக ரவுடி சாம்ராஜ்யத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் பகுதிகளில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்ததாக கூறப்படுகிறது. போலீசாரும் கொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை அவ்வபோது தேடி கைதுசெய்து வருகின்றனர்.
மேலும், ரவுடிகள் தினேஷ், தணிகா ஆகியோர் பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், செய்யாறில் சதீஷ் என்ற வாலிபரும், காஞ்சிபுரம் வணிகர் தெருவில் கருணாகரன் என்ற வாலிபரும் கொலை செய்யப்பட்டனர். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளி தினேஷ் தனது அடியாட்களை ஏவிவிட்டு, ரவுடி தணிகாவின் கூட்டாளிகளான கோபி, ஜீவா, ஆகியோரை பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்தான். ரவுடிகள் தனது அடியாட்கள் மூலம், மிரட்டல், மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த ரவுடி தினேஷை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் கோவா மாநிலத்தில் ஒன்றுகூடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்பி சண்முகப்பிரியா தலைமையிலான மாவட்ட தனிப்படை கோவா சென்று லாட்ஜில் பதுங்கி இருந்த தினேஷ், தியாகு, கார்த்திக், ராஜேஷ், மணிகண்டன், டேவிட், ராஜா, சதீஷ் ,விக்னேஷ், மணிமாறன், துளசிராம், கடலூர் ரவுடி சுரேந்திரன் ஆகிய 20 ரவுடிகளையும் அதிரடியாக கைது செய்து காஞ்சிபுரம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், கடலூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு ரவுடி சுரேந்தர், திருவள்ளூர் மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த ரெட்ஹில்ஸ் காந்தி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சேது சுகேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மண்டலத்தின் முக்கிய பிரபல ரவுடிகள் இருபதுபேர் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை காவல்துறை தலைவர் சாமுண்டீஸ்வரி கூறினார்.