பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்! சிசிடிவி காட்சி
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பணத்திற்காக பெட்ரோல் பங்க் ஊழியரை கொள்ளையர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிதம்பரம் அருகேயுள்ள புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் இந்த பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர். குறிப்பிட்ட தொகைக்கு பெட்ரோல் போட்டுவிட்டு இயல்பாக பணத்தை கொடுத்துள்ளனர். அருகில் இருந்த ஒரு சிலரும் அந்த இடத்தை விட்டுச் சென்றதை நோட்டமிட்ட மூன்று பேரும் ஊழியரிடம் இருந்த பணப்பையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் பணப்பையை விடாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த நீண்ட அரிவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கினர். பின்பு பணப்பையுடன் தப்பியோடினர்.
இந்த கொடூர தாக்குதலில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அங்கிருந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

