கொடைக்கானலில் 70வயது முதியவரை ஏமாற்றி பணம் பறித்து சென்ற மர்ம ஆசாமி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த முதியவர் லூயிஸ். இவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பலசரக்கு பொருட்களை வண்டியில் ஏற்றி விட உதவி செய்யுமாறும் அதற்கு பணம் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அண்ணாசாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டில், பலசரக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். அங்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கேட்டுள்ளார் அந்த ஆசாமி. கடைக்காரர்களுக்கும் அவர் கேட்ட பொருட்களை எடுத்துவைத்துள்ளனர். பிறகு அந்த ஆசாமி முதியவரிடம் “தற்போது என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் காட்டாக இருக்கிறது. அதனை தற்போது எடுக்க முடியாது. இப்போதைக்கு உங்களிடம் இருக்கும் சில்லரைப் பணத்தை கொடுங்கள். பின்னர், நான் மொத்தமாக உங்களுக்கு தருகிறேன்” என கூறி முதியவரிடம் 1500 ரூபாய் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, பொருட்களை பார்த்துக் கொள்ளுங்கள், வாகனத்தை எடுத்துவருகிறேன் என முதியவரிடம் கூறிய ஆசாமி நைசாக அந்த இடத்தை விட்டு காலி செய்துள்ளார். சிறிது நேரம் காத்திருந்த முதியவர் கடைக்காரரிடம் நடந்ததை கூறியுள்ளார். கடைக்காரர்கள் அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அந்த மர்ம ஆசாமியை காணவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது செய்தி முதியவருக்கு தெரியவந்துள்ளது.
கடைக்காரர்கள் சிறிது கவனத்துடன் இருந்ததால் பலசரக்கு பொருட்கள் தப்பித்தது. மர்ம ஆசாமி முதியவரை ஏமாற்றிய சி.சி.டிவி. காட்சிகள்
தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.