‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்குத் தொடர்பாக 2வது அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ல் முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
சிபிஐயின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ தனது விசாரணையை தொடர வேண்டும் எனவும் 6 மாதத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை முடித்து 2வது அறிக்கையை சிபிஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை யாருடைய தூண்டுதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ-யின் 2வது அறிக்கைக்கு பதில் அளிக்க ஆஜராகும்படி, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தந்தைக்கு கடந்த 4ஆம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராக டி.எஸ்.பி.விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வந்த நிலையில், நீதிபதி இல்லாததால் வழக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
சிபிஐ-யின் 2வது அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி மனு தாக்கல் செய்வதுடன், விசாரணை அதிகாரியை மாற்றவும் கேட்டுக்கொள்ளப்படும் என டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.