முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் விவகாரம் : லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
விசாரணையின்போது, நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்த பணிகள் முதலமைச்சரின் நெருங்கிய உறவினர்களுக்கு விதிகளை மீறி, அதிக தொகைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று வாதிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இந்நிலையில் ‘முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளதால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்’ என்று திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் ஒரு வாரத்தில் இதுதொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டதில் ஊழல் நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லையென லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.