''நதிநீர் பிரச்னையில் தலையிட முடியாது'': உச்சநீதிமன்றம்
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. புதுச்சேரி, கர்நாடகா மற்றும் மத்திய அரசின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்த்தார்.
அப்போது காவிரி வரைவு செயல் திட்டம் தர உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு தற்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தனர். ஒவ்வொரு நேரத்திலும் நதிநீர் பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.