காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என கர்நாடகா கூறியது. மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அமைச்சர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தது. இதற்கிடையில் மத்திய அரசு விளக்கம் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்தது. இறுதித் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள ஸ்கீம் என்பதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டுமா அல்லது நிர்வாக, தொழில்நுட்ப குழுவாக அமைக்கமுடியுமா என்று மத்திய அரசு கேட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் இரு வழக்குகளையும் இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தது. வழக்கு எண் 42 என்பதால் 12மணிக்கு மேல்தான் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படலாம் அல்லது இடைக்காலமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடலாம்.
இவைதான் இன்றைய வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாக இருக்கும். ஒருவேளை ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரிய மத்திய அரசுக்கு இன்றே விளக்கமும் வழங்கும் வாய்ப்பும் உள்ளது. ஸ்கீம் என்பதை எப்படி அமைக்கலாம் என மத்திய மாநில அரசுகளிடம் கேட்டு வழக்கு ஒத்திவைக்கப்படலாம்.