காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான்: உச்சநீதிமன்றம்

காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான்: உச்சநீதிமன்றம்

காவிரி தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான்: உச்சநீதிமன்றம்
Published on

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 14-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கால அவகாசம் முடியும் நாளில், ‘ஸ்கீம்’ என்று குறிப்பிட்டிருப்பது பற்றி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு‌ மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 3-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. வரைவுத் திட்டம் தயாராக இருப்பதாகவும் ஆனால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் காரணங்களைக் காட்டி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தள்ளிப்போடுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். அத்தோடு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீரை திறக்கவும் கர்நாடகா அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவிரி வரைவு அறிக்கை எந்த அளவிற்கு‌ தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, கர்நாடகா அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், குடிநீர் தேவைக்கே பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. மத்திய அரசு தரப்பிலும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவிரி தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் காவிரி வழக்கு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகா தேர்தல் காரணமாக வரைவுத் திட்டம் பற்றி முடிவெடுக்க முடியவில்லை என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசை நம்பினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரும் கிடைக்காது என தமிழக அரசின் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. அத்தோடு மட்டுமில்லாமல் காவிரி விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே மாதம் 14ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் வரைவுத் திட்டம் பற்றி மத்திய நீர் வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவிரி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை, கர்நாடகா தேர்தலுக்கு பின்னே நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com