வைகோ மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

வைகோ மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
வைகோ மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
ஆளுநர் மாளிகை குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அனுமதியின்று போராட்டம் நடத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி குறித்து நக்கீரன் இதழில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் ஆளுநரின் பெயரை இணைத்து அவதூறு பரப்புவதாகவும், மேலும் ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் - ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ஆளுநரின் செயலாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட சிலர் மீது சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பத்திரிகை ஊடகத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்ட களத்தில் இறங்கினர். போராட்டத்தின்போதும், எழும்பூர் மாஜிஸ்திரேட் ரிமான்ட் செய்ய மறுத்ததால் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்க முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 5 பேர் மீது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, போக்குவரத்தை முடக்கியது ஆகிய பிரிவுகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எம்.எல்.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வைகோ மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் இன்று பிறப்பித்த தீர்ப்பில் வைகோ உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
- முகேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com