பதவி நியமனங்கள் குறித்த வழக்கு - ஓபிஎஸ், இபிஎஸ் சசிகலாவுக்கு பதிலளிக்க உத்தரவு

பதவி நியமனங்கள் குறித்த வழக்கு - ஓபிஎஸ், இபிஎஸ் சசிகலாவுக்கு பதிலளிக்க உத்தரவு
பதவி நியமனங்கள் குறித்த வழக்கு - ஓபிஎஸ், இபிஎஸ் சசிகலாவுக்கு பதிலளிக்க உத்தரவு

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரி அக்கட்சியின் உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக கட்சி விதியின்படி, பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை திருத்த முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, பொதுச்செயலாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் பொதுச்செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. இது கட்சியின் விதிகளுக்கு முரணானது.

கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டை தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை. 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்பட கட்சிக்கு தடை விதிக்க வேண்டும். பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு ஜூலை 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com