சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றதால் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய உரிமையாளர்கள்?
திருவள்ளூரில் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த புதுக்குப்பத்தில் தனியார் செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு காரணமாக அவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறியதால் அவர்களை செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் 4 பேர் காயமடைந்ததில் ஒரு பெண் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து செங்கல் சூளையின் உரிமையாளர்கள் முனுசாமி, லக்ஷ்மிபதி, மேலாளர் ஆசிர்வாதம் ஆகியோர் மீது வெங்கல் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா செங்கல் சூளையில் நேரில் ஆய்வு செய்து, 3 தினங்களில் ரயில் ஏற்பாடு செய்து சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர்களிடம் உறுதி அளித்தார்.