விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரபட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தற்போது தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக இருக்கிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க மாநில தலைவராக இருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனை விமர்ச்சித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாடி கார்த்திகேயன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் தமிழிசை ஆஜராக சம்மன் அனுபப்பட்டது. சம்மனையும் வழக்கையும் ரத்து செய்யக்கோரி தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு பலமுறை விசாரணைக்கு வந்தபோதும், தமிழிசை சவுந்ததராஜன் தாப்பிலும், தாடி கார்த்திகேயன் தரப்பிலும் ஆஜராகவில்லை. அதன்பின்னர் இந்த வழக்கில் உத்தரவிட்டுள்ள நீதிபதி, அரசியல் சாசனம் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றை வழங்கினாலும், அதற்கான கட்டுப்பாடுகளையும் வகுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
'இந்த வழக்கு அரசியல் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்காக தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தோ, அதன் தலைவர் தொல். திருமாவளவனிடமிருந்தோ எந்த அங்கீகாரமும் வழங்கப்படாத நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் கருத்தால் பாதிக்கப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கை ஏற்க முடியாது' எனக் கூறி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.