கமல் மீது வழக்கு: ஒரு வாரத்தில் பதிலளிக்க ஆணையருக்கு உத்தரவு
இந்துக்களை அவதூறாக பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில் இந்துத் தீவிரவாதம் இனியும் இல்லை என சொல்லிவிட முடியாது என்று கமல்ஹாசன் இதழ் ஒன்றில் எழுதியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார். இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்காக அமைந்துள்ளது. மேலும் நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் இது கேடு விளைவிக்கும். எனவே கமல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் அதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தேவராஜ் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கமல் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

