கனமழையால் நிறுத்தப்பட்ட ஏலத்தோட்ட பணிகள்: தொழிலாளர்கள் ஏமாற்றம்

கனமழையால் நிறுத்தப்பட்ட ஏலத்தோட்ட பணிகள்: தொழிலாளர்கள் ஏமாற்றம்

கனமழையால் நிறுத்தப்பட்ட ஏலத்தோட்ட பணிகள்: தொழிலாளர்கள் ஏமாற்றம்
Published on

பலத்த காற்றோடு பெய்யும் கனமழை காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இடுக்கி மாவட்டத்தின் ஏலத்தோட்டங்களில் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. 

தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். இன்றும் வழக்கம் போல தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகாலை குமுளி வந்த தொழிலாளர்கள், அங்கிருந்து இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு பணிக்கு சென்றனர். 

ஆனால் காலையில் பணியை துவங்கியது முதலே இடைவிடாத தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீசியதால் ஏலக்காய் காட்டிற்குள் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. பெரிய மரங்கள் நிறைந்த ஏலக்காட்டிற்குள், காற்றுக்கும் மழைக்கும் இடையே பணி செய்வது ஆபாத்தானது என்பதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, பணிகள் காலை 11 மணிக்கெல்லாம் நிறுத்தப்பட்டன. இதனால், வழக்கமாக மாலை 6 மணி வரை வேலைபார்க்கும் பெண் தொழிலாளர்கள் சாப்பாட்டு பைகளுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். மழை இதேபோன்று நீடித்தால், இன்னும் இரண்டு நாட்களுக்கு அவர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்படும்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com