கேரள மாநிலத்தில் தொடர் கனமழையாலும் வரத்து குறைந்ததாலும் ஏலக்காய் விலை அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் அதிகமாக விளையும் ஏலக்காய் தற்போது விலை ஏற்றம் அடைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால் ஏலக்காய் செடிகள் சேதமடைந்தன. அதன் தாக்கத்தால் அழுகல் நோயால் பெரும்பாலான ஏலக்காய் செடிகள் தோட்டங்களிலேயே அழிந்தன. இதனால் ஏலக்காய் வரத்து குறைந்தது, ஒரு கிலோ ஏலக்காய் இரண்டாயிரம் ரூபாயை தாண்டி விற்றது. பின் படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் ஏலக்காய் வரத்து தற்போது திரும்பவும் குறைந்துள்ளது. இதனால் ஏலக்காய் விலையில் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ ஏலக்காய் ஆயிரத்தி இருநூறு ரூபாயை தாண்டி விலை அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தில் நடந்த ஏலக்காய் ஏலத்தில் 1,62,380 கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்டது. ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்சமாக 1,527 க்கும், சராசரியாக கிலோ 1,287 க்கும் ஏலம் போனது.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ஏலக்காய் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.