கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ! தூக்கி வீசப்பட்ட இளைஞர் (சிசிடிவி காட்சிகள்)

கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ! தூக்கி வீசப்பட்ட இளைஞர் (சிசிடிவி காட்சிகள்)
கார் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ! தூக்கி வீசப்பட்ட இளைஞர் (சிசிடிவி காட்சிகள்)

கோவை பீளமேடு அருகே உள்ள கொடிசியா சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவி, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது. இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் 5  கல்லூரிகளும் உள்ளன. அதேபோல நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும், கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டி வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலையில் தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன.

இந்நிலையில் நேற்று மாலை 4.42 மணியளவில் TN 38 AJ 1383 என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு ரேஸில் ஈடுபட்டுள்ளன. அப்போது  இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைக்கும் பொழுது, விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அதேபோல காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகமாக சென்றனர்.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் அதிவேகமாக சென்ற காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர். ஆனால் கார் சென்ற வேகத்திற்கு பிடிக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்,

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து, கார் ரேஸில் ஈடுபட்டு வாகன விபத்தை ஏற்படுத்தியவர் கல்லூரி மாணவி தட்சணா ரூத் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர் மீது  3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகன விபத்தில் படுகாயம் அடைந்தது கல்லூரி மாணவர் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. தற்பாது தனியார் மருத்துவனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com