தமிழகமே எதிர்பார்த்த அறிவிப்பு.. இடைத்தேர்தல் எப்போது நடக்கும்? CM விஜயின் அடுத்த Move என்ன?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர்.
குறிப்பாக, மதுராந்தகம் தொகுதியில் வெற்றிபெற்ற மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் வெற்றிபெற்ற ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா, அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா ஆகியோரும், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்தனர்.
மேலும், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ததால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. இந்த 7 தொகுதிகளில், 5-ல் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தலை நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 2 தொகுதிகளான மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 9-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும், 16-ஆம் தேதிதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17-ஆம் தேதி அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கும் என்றும், வேட்பு மனுக்களை 19-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 6-ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், 9-ஆம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும், எந்த வேட்பாளரை அதிமுக முன்னிறுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வியாக, அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தற்போது தவெகவில் இணைந்துவிட்டனர். மீண்டும் அவர்களேதான் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
ஆனால், மீண்டும் போட்டியிட்டால் அவர்கள் வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ.. மக்கள் மத்தியில் தவெகவுக்கு உள்ள செல்வாக்கை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்படுவதால், அனைத்து தரப்பினரும் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஒருவேளை தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 107-ல் இருந்து 109-ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

