தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி கொட்டிய அதிகனமழையால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து, தீவு போல காட்சி அளித்தது. திருச்செந்தூரில் இருந்து செல்லும் முக்கிய சாலையான தூத்துக்குடி சாலை மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல்வேறு பகுதிகளில் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
தற்போது திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உடைப்பு ஏற்பட்ட இடங்கள் சரிசெய்யப்பட்டு, 5 நாட்களுக்குப் பிறகு நேர் வழியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் செல்லும் பேருந்துகள் குரும்பூர் சென்று, அங்கிருந்து நாசரேத், பால்குளம் வழியாக ஆழ்வார் திருநகரி சென்று, திருநெல்வேலிக்கு இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், 5 நாட்களுக்கு பின் திருச்செந்தூர் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.