தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுகள்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ கழிவுகள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகளில் மீதமாகும் மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி மருத்துவமனைகளில் பயன்படுத்திய பேண்டேஜ் துணிகள், கை உறைகள், மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கழிவுகள் போன்ற மருத்துவக் கழிவுகளை குறிப்பிட்ட நாட்களில் மருத்துவக் கழிவு மேலாண்மை மையத்தினர் எடுத்துச்சென்று இன்சினரேஷன் மூலம் அதிக வெப்பநிலையில் அழித்துவிடுவர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரி கரை அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொண்ட மூட்டைகள் கிடந்தன. அதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரிஞ்சுகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முழு உடல் கவசம், முக கவசம் போன்றவை இருந்தன. சில தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்கள்தான் அடிக்கடி இரவு நேரங்களில் சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.