தகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்

தகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்
தகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்

தங்கை மற்றும் சித்தியுடன் தகாத உறவு வைத்திருப்பதை நேரில் பார்த்த தம்பியை சொந்த அண்ணனே படுகொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் அரங்கேறியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் - ஆதிபராசக்தி தம்பதியினருக்கு சரத்குமார்(21), சிவக்குமார் (15) என்ற மகன்களும் சவுந்தர்யா (19), மகளும் உள்ளனர். இளைய மகன் சிவக்குமார் எலவனாசூர் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி மதியம் சுமார் 2 மணிக்கு வீட்டை விட்டு வெளியே விளையாட சென்ற சிவக்குமார் மாலை 6 மணி ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமாரின் தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். 

அப்போது அயன்குஞ்சரம் கிராமத்தில் ஒரு அருகே உள்ள காப்பு காட்டில் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சிவக்குமார் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்துவந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் உடன்பிறந்த அண்ணன் சரத்குமார் குஞ்சரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் நேரில் ஆஜராகி தனது தம்பி சிவக்குமாரை கொலை செய்தது தான்தான் எனவும் என்னுடன் எனது தங்கை செளந்தர்யா, எனது சித்தி புஷ்பா ஆகியோரும் உடனிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். 

இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது தந்தையின் உடன்பிறந்த தம்பியின் மனைவி புஷ்பாவுடனும்(30), தனது தங்கை சவுந்தர்யாவுடனும் தான் தகாத உறவு வைத்திருந்ததை தனது தம்பி சிவக்குமார் நேரில் பார்த்து விட்டதாகவும் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சிவக்குமாரை கொலை செய்து விட்டதாகவும் சரத்குமார் தெரிவித்தார். 

மேலும், “விடுமுறை நாட்களில் எனது தம்பி சிவக்குமார் காப்பு காட்டிற்கு சென்று வலை வைத்து காடை, கவுதாரி, முயல், உடும்புகளை வளைவைத்து பிடித்து வருவது வழக்கம். அதேபோன்று சம்பவத்தன்று விடுமுறை என்பதால் உடும்பு பிடிக்கலாம் என்று கூறி காப்புக் காட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஏற்கெனவே புஷ்பா மற்றும் சவுந்தர்யாவை வர சொல்லி விட்டேன். மாலை சுமார் மூன்று மணி அளவில் நானும் எனது தம்பியும் காப்பு காட்டிற்கு சென்றோம். அங்கு வைத்து சிவக்குமாரை கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அவன் தப்பி ஓடாதவாறு எனது தங்கையும் சித்தி புஷ்பாவும் சிவக்குமாரின் கை, கால்களை பிடித்து கொண்டனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டோம். இதையடுத்து அம்மா தேடுவதை பார்த்ததும் நாங்களும் தேடுவது போல் நாடகம் ஆடினோம்” என சரத்குமார் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சரத்குமார், சௌந்தர்யா, புஷ்பா ஆகியோரை கைது செய்த போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com