பட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு

பட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு
பட்டியலின மக்கள் பாலம் அமைக்க எதிர்ப்பு - அதிகாரிகள் ஆய்வு

மதுரை மாவட்டம் பொட்டல்பட்டி கிராமத்தில், பட்டியலின மக்கள் கால்வாயை கடப்பதற்கான பாலம் அமைப்பது தொடர்பாக, ஆர்டிஓ தலைமையிலான அதிகாரிகள் அளவிடும் பணியை மேற்கொண்டனர். 

பொட்டல்பட்டி, மதுரை மதுரை மாவட்டத்தில் தீண்டாமைச்சுவர் விவகாரத்தால் பேசுபொருளான உத்தபுரம் கிராமம் அருகே, மற்றொரு பிரச்னை புகைந்து கொண்டிருக்கிறது. பொட்டல்பட்டி கிராமத்தில் சாக்கடை தேங்கி நிற்கும் கால்வாய் தான், அந்த புதிய பிரச்னைக்கு காரணம். 

பொட்டல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் 60க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து, அப்பகுதியில் 2 ஏக்கர் இடத்தை வாங்கியுள்ளனர். அந்த இடத்திற்கு அருகிலேயே, மற்றொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் நிலம் வாங்கியுள்ளனர். இருதரப்பு மக்களும் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து அங்கு வீடுகளைக் கட்டி வசித்து வருகிறார்கள். 

பிரச்னை என்னவென்றால், பட்டியல் இன மக்கள் பொதுப்பாதையை பயன்படுத்த, மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான். இரு சமூகத்தினரும் அப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயைக் கடந்து தான் பிரதான சாலைக்கு செல்ல முடியும். 

இந்நிலையில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு கால்வாயை கடக்க அரசு சார்பில் பாலம் கட்டிக்கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் தங்களுக்கும் பாலம் கட்டித்தர பட்டியலின மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டும் பட்டியலின மக்கள், அந்த பாதையில் குப்பை, முட்செடிகளை கொட்டி இடையூறு ஏற்படுத்துவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.

பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படும் சமூகத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் கூறுகையில், ஆதிதிராவிட மக்களுக்கு மாற்று பாதை உள்ள நிலையில், அவர்கள் பிரச்சனைக்குள்ளான இடத்திலும் பாதை அமைக்க முயற்சித்ததால் எதிர்ப்பு எழுந்திருப்பதாக விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே, இவ்விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் முன், மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை உதவி இயக்குநர் செல்லத்துரை கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தபின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com