செங்கல் சூளை, மண்பாண்டத்தொழில் செய்வோர் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்க அரசு அனுமதி
செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்டத் தொழில் செய்வோர் ஆகியோர் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்டத்தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை தமிழக அரசு நீக்கியுள்ளது. அதன்படி, 1.5 மீட்டர் ஆழம் வரை சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உரிய கட்டணத்தை செலுத்தி மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று மண் எடுக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு அரசு, மண் எடுக்கும் இடத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் இருக்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கிராமப்புற சாலைகளில் இருந்து 10 மீட்டர் வரையிலும், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே சாலை, நீர்நிலைகளில் இருந்து 50மீட்டர் வரையிலும் மண் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.