சென்னை மாதவரம் பகுதியில் வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை
சென்னை மாதவரம் பகுதியில் வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை புதிய தலைமுறை

சென்னை | வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை - கடைக்கு சீல் வைப்பு; விரிவடையும் சோதனை!

சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

செய்தியாளர்: சுரேஷ்குமார்

பிறந்த குழந்தைக்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி உறுதிபடுத்தப்படுகிறது என்பது மருத்துவர்களின் அறிவுரை. இதனை பயன்படுத்தி சென்னை மாதவரத்தில் தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்துள்ளனர் சிலர். இதையறிந்து, அந்தக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாதவரத்தில் உள்ள கே.கே.ஆர். கார்டன் பகுதியில் புரோட்டின் விற்பனை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கடையில் சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தக் கடையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் போஸ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் அருளானந்தம் தலைமையிலான குழுவினரும் அங்கு சோதனை செய்தனர்.

சென்னை மாதவரம் பகுதியில் வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை
ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை... குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? மருத்துவர் விளக்கம்!

சோதனையில் தாய்ப்பாலை நன்கொடையாகப் பெற்று அதனை பதப்படுத்தி ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 மில்லி தாய்ப்பால் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் இருந்து தாய்ப்பாலை தானமாகப் பெற்றதாகவும் கடையின் உரிமையாளர் முத்தையா தெரிவித்துள்ளார்.

Mothers feeding
Mothers feedingpt desk

இந்தச் சூழலில் யார் யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது, எப்படி விற்பனை செய்யப்பட்டது போன்றவை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் .

சென்னை மாதவரம் பகுதியில் வணிக ரீதியாக தாய்ப்பால் விற்பனை
தருமபுரி: துர்நாற்றம் வீசியதால் எழுந்த சந்தேகம் - கதவை உடைத்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

சட்டவிரோதமாக செயல்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யும் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப்பால் அடைக்கப்பட்ட பாட்டில்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இதுபோல வேறு நிறுவனங்கள் எதுவும் தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனவா என்று ஆய்வு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தாய்ப்பால் விற்பனை தொடர்பாக மாதவரம் காவல்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். மேற்கொண்டு மாநிலம் முழுவதும் இந்த சோதனை விரிவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com