பன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்

பன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்
பன்றிக்காக கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - திருச்சியில் கொடூர சம்பவம்

திருச்சியில் பன்றி இருக்கும் இடத்தைக் காட்டியதால் 12 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் அலியார்.  இவரது மகன் அப்துல் வாஹித்(12). இவர் ஆறாம் வகுப்பு படித்து விட்டு பள்ளியிலிருந்து இடை நின்றவர். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற அப்துல் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் மற்றும் உறவினர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்து உள்ளனர். எங்கும் தேடி அப்துல் வாஹித் கிடைக்காததால், இதுகுறித்து அவரது தாய் 6ம் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அரசியல் பிரமுகர் கயல்விழி சேகரின் மகன் முத்துக்குமாரும், இளவரசனும் தனது மகனை பன்றி மேய்க்க சொல்லி ஏற்கனவே அடித்துள்ளதாகவும், எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தாய் பகுர் நிஷா அரியமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையின்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியானது. இது குறித்து முத்துக்குமார், “எனது அண்ணன் (பெரியப்பா பையன்) சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி பிடித்து விற்பனை செய்து வந்தான். அவனுக்கு அப்துல் வாஹித் உதவி செய்தான். குறிப்பாக எங்கள் பன்றி எங்கே நிற்கிறது என வேவு பார்த்து அவன் கூறினான். அதனால் தான் சிறுவனை மிரட்ட என் கூட்டாளிகளை அவனை பிடித்து அடிக்க சொன்னேன்” எனத் கூறினார். 

முத்துக்குமாரின் கூட்டாளிகளான இளவரசன்(18), சரவணன்(19), லோகேஷ் (16), வீராச்சாமி(16) ஆகிய 4 பேரும் அடித்த பொழுது சிறுவன் இறந்துள்ளார். சிறுவனின் உடலை பன்றி கொட்டகைக்கு பின் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் உள்ள 15 அடி ஆழ பயன்பாட்டில் இல்லாத குப்பைகள் நிறைந்த தொட்டியில் கல்லைக் கட்டி உள்ளே போட்டதாக அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கிட்டத்தட்ட 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பன்றிக்காக 12 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வீராச்சாமி, லோகேஷ், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர். இருப்பினும், உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக செயல்படும் பன்றி கொட்டகையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com