சென்னை வெள்ளத்தில் சிக்கிய அமீர் கான்! விஷ்ணு விஷால் போட்ட ட்விட்; விரைந்து செயல்பட்ட மீட்பு படை!

சென்னை வெள்ளத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான் இருவரும் மாட்டிக்கொண்டதாக தகவல் கிடைத்த நிலையில், மீட்பு படை விரைந்து சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுவந்துள்ளது.
மிக்ஜாம் புயல் - அமீர் கான்
மிக்ஜாம் புயல் - அமீர் கான்X

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 36 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியாக பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று இரவு முதல் மழை குறைந்து இன்று காலை முதல் வெயில் அடிக்க துவங்கியுள்ளது.

மழை நின்ற போதும் மக்கள் படும் துயரங்கள் நின்றபாடில்லை. அரசு தரப்பில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தபோதும் பல இடங்களில் தங்களுக்கு இன்னும் உதவிகள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன. பல இடங்களில் வீடுகள், கடைகள், சாலைகளை இன்னும் வெள்ளம் சூழ்ந்த வண்ணமே உள்ளன. தன்னார்வலர்கள் பலரும் மீட்பு பணிகளில் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய வீட்டில் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும், உதவிக்கு அழைத்திருப்பதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

என்னுடைய வீட்டில் வெள்ளம் சூழ்ந்துள்ளது! - விஷ்ணு விஷால்

உதவி கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால், “ காரப்பாக்கத்தில் இருக்கும் எனது வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து நீரின் மட்டம் மிக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவிக்கு அழைத்துள்ளேன். இங்கு மின்சாரம், வைஃபை மற்றும் போன் சிக்னல் என எதுவுமே இல்லை.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு சில சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை முழுவதும் உள்ள மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது. மக்கள் அனைவரும் தைரியமாக இருங்கள்” என பதிவிட்டிருந்தார்.

மீட்கப்பட்ட நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர் கான்!

விஷ்ணு விஷாலின் எக்ஸ் தள பதிவிற்கு பிறகு காரப்பாக்கம் விரைந்த மீட்பு படையினர், அங்கிருந்த விஷ்ணு விஷாலோடு அமீர்கானையும் மீட்டுள்ளனர். தன் தாயாரை சென்னை மருத்துவமனையில் சேர்த்திருக்கும் அமீர்கான், அருகிலிருந்து அவரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் வெள்ளத்தில் அவரும் சிக்கிக்கொண்டுள்ளார். விஷ்னு விசால் மற்றும் அமீர்கான் இருவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பான இடத்திற்கு அவர்களை கொண்டுசென்றனர்.

இந்நிலையில் தங்களை மீட்டதற்காக நன்றி தெரிவித்திருக்கும் விஷ்ணு விஷால், எக்ஸ் தளத்தில் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணிக்கும், அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு சிறந்த மனிதராக இருந்த அமீர்கானுக்கு நன்றி சொல்லுங்கள்! - தொழில்துறை அமைச்சர்

நடிகர் விஷ்ணு விஷால் நன்றி பதிவிற்கு பதிலளித்திருக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “பாராட்டுக்கு மிக்க நன்றி விஷ்ணு விஷால். ஆனால் ஒரு சிறந்த மனிதராக இருந்ததற்காக உங்கள் பக்கத்தில் இருக்கும் அமீர் கானுக்கும் நன்றி சொல்லுங்கள். வியக்க வைக்கும் வகையில், அவர் விரைவில் வெளியேற வேண்டும் என்பதற்காக வேறு எந்த வழியையும் அவர் முயற்சிக்கவில்லை. எங்கள் சக குடிமக்கள் அனைவரையும் போலவே அவரும் மிகவும் சாதாரணமாக இருப்பதையும், மீட்கப்படுவதற்காக பொறுமையாக காத்திருப்பதையும் பார்ப்பது பிரமிக்க வைக்கிறது. கயிற்றை இழுக்க முயலும் மற்றவர்களுக்கு இதுஒரு பாடம்!

திரு அமீர்கான் போன்றவர்கள் கையிலிருக்கும் பிரச்னையின் அளவை உணர்ந்து, பொறுமையாக அவர்களின் முறைக்காக காத்திருந்ததற்காக நன்றி. எங்கள் மீட்பு பணியை தொடர்ந்து கடைப்பிடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com