கன்னியாகுமரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை - கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், மண்டைக்காடு, சுற்றுவட்டார கடல் பகுதியில் சூரை காற்றுடன் கனமழை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வழிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் அதன் ஒட்டியுள்ள கடலோர பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிப்பதோடு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் குமரி மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் கடற்கரை பகுதிகளான குளச்சல், முட்டம், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை சுற்றுவட்டார கடல் பகுதிகளிலும் காற்றுடன் கனமழை பெய்ததோடு, இன்றும் கடல் பகுதியில் கனமழை தொடர்கிறது.
இதனால் குளச்சல், கொட்டில்பாடு, கோடிமுனை, குறும்பனை, முட்டம், மண்டைக்காடு மீனவக் கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட கட்டுமரம், வள்ளம், மீனவர்களும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்திலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வரும் 18-ம் தேதி வரை குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.