’இதுதான் தூய்மை இந்தியாவா?’ எனக் கேட்ட மக்கள் - உடனே சாக்கடையை அள்ளிய பாஜகவினர்

’இதுதான் தூய்மை இந்தியாவா?’ எனக் கேட்ட மக்கள் - உடனே சாக்கடையை அள்ளிய பாஜகவினர்
’இதுதான் தூய்மை இந்தியாவா?’ எனக் கேட்ட மக்கள் - உடனே சாக்கடையை அள்ளிய பாஜகவினர்

''தூய்மை இந்தியா திட்டம் என்கிறீர்கள். எங்கள் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யப்படவில்லை'' எனக்கூறி மக்கள் ஆதரவளிக்க மறுத்ததைத் தொடர்ந்து சாக்கடையை சுத்தம் செய்து பாஜகவினர் வாக்கு கேட்டனர்.

திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 12 வது வார்டு, 15வது வார்டு புதுத்தெரு, பூசாரி தெரு, பதுவை நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் சிலர், ’’தூய்மை இந்தியா திட்டம் என்று பரப்புரை செய்கிறீர்கள்; ஆனால் எங்கள் பகுதியில் நீண்டகாலமாக கழிவுநீர் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிறகு நாங்கள் எப்படி உங்களுக்கு ஆதரவு அளிக்க முடியும்’’ என மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் 12வது வார்டில் போட்டியிடும் நவநீதகிருஷ்ணன், 15வது வார்டில் போட்டியிடும் நாகவல்லி ஆகியோரு ஆதரவு கேட்டுச்சென்ற திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பாஜகவினர் அப்போதே சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பிறகு அந்தப் பகுதிகளில் இதுபோன்று சாக்கடை அடைப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com