சூர்யா சிவாவை விடுவிக்க கோரி திருச்சியில் பாஜக பிரமுகர்கள் சாலை மறியல்

சூர்யா சிவாவை விடுவிக்க கோரி திருச்சியில் பாஜக பிரமுகர்கள் சாலை மறியல்
சூர்யா சிவாவை விடுவிக்க கோரி திருச்சியில் பாஜக பிரமுகர்கள் சாலை மறியல்

பாஜகவின் OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா திருச்சியில் இன்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும், பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினருக்கும், போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர். 

கடந்த 11ம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்தும் டெம்போ டிராவலர் வாகனமும் காரும் மோதிக் கொண்ட விபத்தொன்று நடந்தது. இதில் பாஜக-வை சேர்ந்தவரும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான சூர்யாவுக்கு சொந்தமான காரின் இடது புறத்தில் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து திருச்சியில் இருந்த பேருந்தின் உரிமையாளரிடம் சூர்யா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்முடிவில், சூர்யாவின் காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதற்கு காப்பீட்டு நிறுவனம் கொடுக்கும் பணத்திலிருந்து, கூடுதலாக ஏற்படும் செலவு தொகையை தான் கொடுத்து விடுவதாக, பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த 4 நாட்கள் தொலைபேசி வாயிலாக, பேருந்தின் உரிமையாளரை தொடர்பு கொள்ள சூர்யா முயற்சி செய்துள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் பேருந்தின் உரிமையாளர், யாருடைய தொலைபேசி அழைப்பையும் ஏற்கவில்லை என சொல்லப்படுகிறது. சில தினங்கள் கழித்து அவரை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவரிடம் 4.5 லட்சம் ரூபாய் பணத்தை இழப்பீடாக சூர்யா கேட்டதாக சொல்லப்படுகிறது. பேருந்தின் உரிமையாளர் அதனை கொடுக்க சம்மதித்தவுடன், அவரிடம் 5 லட்சம் ரூபாய் வேண்டுமென நிர்ப்பந்தம் செய்துதாகவும், அதனை பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை ஏற்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதன் பின்னர் அந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு பேருந்து திருச்சி பேருந்து நிலையம் அருகே 20 பயணிகளோடு நின்றுகொண்டிருந்தது. ஆத்திரத்தில் இருந்த சூர்யாவும், அவரது நண்பர்கள் 11 பேரும் சேர்ந்து, அந்த பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறங்கச்செய்தனர். பின்னர் அப்பேருந்தை கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தனியார் பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் சூர்யா கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டுக் கொள்ளை, மிரட்டல், அசிங்கமாக திட்டுதல் உள்ளிட்ட நான்கு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதை எதிர்த்து, பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் சில மணி நேரத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

செய்தியாளர்: லெனின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com