“என்னை சீண்டி பார்க்காதீங்க; திருப்பி அடிக்க தைரியம் இருக்கு” - ஆவேசமாக பேசி கண்ணீர்விட்ட குஷ்பு

“முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது தி.மு.க. இப்படி இல்லை”
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி-குஷ்பு
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி-குஷ்புPT Desk

தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது தொடர்பாக, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

"பெண்களை அவதூறாக பேச யார் உரிமை கொடுத்தது?"

அப்போது, “இப்படிப்பட்ட பொறுப்பில் இருக்கும் என்னையே தவறாக பேசும் நபரை விட்டுவிட்டால், மக்கள் அதனை சாதாரண எடுத்துக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவதுதான் புதிய திராவிட மாடலா?. பெண்களை அவதூறாக பேச யார் உரிமை கொடுத்தது. குஷ்புவுக்கு இந்த நிலை என்றால், மற்ற பெண்களுக்கு என்ன நிலை என்று தான் நான் பேசுகின்றேன். அரசியல் ரீதியாக பதில் கருத்தை தெரிவியுங்கள். சிவாஜி கிருஷ்ணன் இப்படி பேசும்போது அவர் வீட்டில் உள்ள பெண்கள் எப்படி பார்கின்றனர் என்று தெரியவில்லை.

"குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க"

இவரை பேசவிட்டு திமுகவின் முதல்வர் குடும்பத்தினர் வேடிக்கை பார்க்கின்றனரா?. குஷ்புவை சீண்டி பார்க்காதீங்க, தாங்க மாட்டீங்க; முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நான் மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன். என்னை சீண்டி பார்க்காதீங்க. திருப்பி அடிக்க எனக்கு தைரியம் இருக்கு. அதற்கு நான் ஒருவரே போதும். 3 மாதம் முன்பு சஸ்பெண்ட் பண்ணி மீண்டும் எப்படி கட்சிக்குள் வந்தார்.

"நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். யாரையும் நம்பி நான் வரவில்லை"

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம் தானாக விசாரணையுடன், வழக்கும் பதிய உள்ளது. ஏற்கனவே திமுகவினர் எனது வீட்டில் கற்களை எறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். யாரையும் நம்பி நான் வரவில்லை, எனது திறமையை நம்பிதான் மேலே வந்துள்ளேன். இதற்குப் பிறகு என்னை சீண்டி பார்க்க வேண்டாம்.

"கருணாநிதி திமுக வேறு மு.க.ஸ்டாலின் திமுக வேறு”

முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோது தி.மு.க. இப்படி இல்லை. எனது தாய் எனக்கு பால் மட்டும் ஊட்டி வளர்க்காமல் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தார்கள். நான் இன்று இப்படி பேசவில்லை என்றால், என் மகளுக்கு நான் எப்படி முன் உதாரணமாக இருப்பேன்” என்று தனது பேட்டியை நிறைவு செய்து விட்டு கண்ணீர் விட்டார் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com