பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது - போலீசாருடன் கடும் வாக்குவாதம்!

பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது. 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணியை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமி
கைது செய்யப்பட்ட ஜெயலட்சுமிPT

பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

சினிமா பாடலாசிரியரும் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியுமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் "சினேகன் பவுண்டேஷன்" என்ற தனது அறக்கட்டளை பெயரில் கடந்த 2022 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நடிகை ஜெயலட்சுமி இணையதளம் மற்றும் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் வாங்கி வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகனின் புகாருக்கு அடுத்த இரு தினங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் 8- தேதி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவியும் நடிகையுமான ஜெயலட்சுமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் எதிர் புகார் அளித்தார். அதில் 'சிநேகம் பவுண்டேஷன்' தனக்கு தான் சொந்தம் எனவும் தான் இதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, ஒருவருக்கொருவர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகம், திருமங்கலம் காவல் நிலையம் என புகார் அளித்த நிலையில் பின் இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதே போல தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுபடி 2022 அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திருமங்கலம் போலீசார் பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்ற வேளையில் நடிகையும் பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமி புகாரில் நீதிமன்றம் முகாந்திரம் இல்லை என முடித்து வைத்தது.

இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகையும் பாஜக பிரமுகமான ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

குறிப்பாக, 'சினேகம் பவுண்டேஷன்' குறித்தான ஆவணங்களை பெறுவதற்காகவும் வழக்கு குறித்து விசாரணை செய்வதற்காகவும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஜெயலட்சுமி வீட்டில் இன்று காலை முதல் திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

பின்னர், நடிகையும், பாஜக பிரமுகருமான ஜெயலட்சுமியை திருமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அவரிடம் சுமார் 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பாடலாசிரியர் சினேகனின் 'சினேகம் பவுண்டேஷன்' பெயரில் மோசடி செய்தது தெரியவந்ததை அடுத்து திருமங்கலம் போலீசார் நடிகை ஜெயலட்சுமி கைது செய்தனர்.

மேலும் நடிகை ஜெயலட்சுமி தொடங்கிய 'சினேகம் பவுண்டேஷன்' அறக்கட்டளையின் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com