தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பதோடு, கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய காய்கறிச் சந்தைகளுக்கு வெங்காயவரத்து சரிந்துள்ளது. வெங்காயம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதால், ஹோட்டல்களில் உணவு சமைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக, பிரியாணி தயாரிப்பில் வெங்காயம் அவசியம் என்பதால், பிரியாணி கடைக்காரர்கள் தவித்துப் போயுள்ளனர். இந்த பாதிப்புகள் பிரியாணியின் விலையில் எதிரொலித்துள்ளது. பிரியாணியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளார்கள் கடைக்காரர்கள். சென்னையில் நடுத்தர உணவகங்களில் தற்போது சிக்கன் பிரியாணியின் விலை 200 ரூபாயாகவும், மட்டன் பிரியாணியின் விலை 250 ரூபாயாகவும் உள்ளது.
சிறிய மற்றும் சாலையோர உணவகங்களில் சிக்கன் பிரியாணி 120 முதல் 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மட்டன் பிரியாணி 150 ரூபாய் முதல் 180 ரூபாய் விற்பனையாகிறது. இது ஏற்கெனவே விற்கப்பட்டதை விட 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் ஆகும். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் சிக்கன் பிரியாணி விலை 300 ரூபாய், மட்டன் பிரியாணி 350 ரூபாய் என உள்ளது. இது 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விலை உயர்வு ஆகும். பிரியாணியின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருப்பதால், பிரியாணி பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.