திடீரென பற்றி எரிந்த பைக் - ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டுபேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பின்னால் அமர்ந்திருந்தவர் சுதாரித்து கொண்டு இறங்கி விட்டார்.
ஆனால் வாகனத்தை ஓட்டி சென்றவர் தீயில் சிக்கி இருசக்கர வாகனத்துடன் அவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அவருடன் வந்திருந்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளானார். அவர் பிரம்மை பிடித்தது போல் யாரிடமும் பேசாமல் சாலையில் ஓரத்தில் அமர்ந்து கொண்டார்.
இந்தத் தீவிபத்து ஏற்பட்டவுடன் அருகிலிருந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தாம்பரம் மற்றும் மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் இருசக்கரவாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. மேலும் உடன் வந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் தகவல்கள் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.