பேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் ? - 3 மாணவர்கள் பரிதாப பலி
திண்டுக்கல்லில் இருச்சக்கர வாகனம் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 3 கல்லூரி மாணவர்கள் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னதாக சென்ற அரசு பேருந்தை அவர்கள் முந்திச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தச் சமயம் எதிரே வந்த வேன் மீது கல்லூரி மாணவர்கள் சென்ற இருச்சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அலெக்ஸ், கேசவன், லட்சுமிபதி ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல்துறையினர், மாணவர்களின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.