திருவாரூர் அருகே காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டத்தில் அருங்காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் உருவச் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை, ஜூன் 20 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்று திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திருவாரூர் சென்று திருவாரூரில் தங்கும் அவர், திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முன்னதாக, வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளன. நிகழ்ச்சியில், பங்கேற்க திருவாரூர் வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளன. முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவாரூரில் இருந்து மன்னை விரைவு ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதனிடையே, இன்று மாலை திருவாரூர் செல்லும் முதல்வர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கிறார்.