கோவை பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பருவத்தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் உட்பட 350 தொலைதூரக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பணம் பெற்றுக்கொண்டு மாணவர்கள் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. சில மையங்களில் விடைத்தாள் திருத்துவதிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தொடங்கவிருந்த பருவத் தேர்வுகள், 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தத் தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முறைகேடுகளை தடுக்க அரசு உதவிபெறும் கல்லூரிகள், அரசுபள்ளிகளில் மட்டும் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.