மதுரை: ஆடிக்கொண்டிருந்தபோதே நாற்காலியில் அமர்ந்து உயிரைவிட்ட நாட்டியக் கலைஞர்

மதுரை: ஆடிக்கொண்டிருந்தபோதே நாற்காலியில் அமர்ந்து உயிரைவிட்ட நாட்டியக் கலைஞர்
மதுரை: ஆடிக்கொண்டிருந்தபோதே நாற்காலியில் அமர்ந்து உயிரைவிட்ட நாட்டியக் கலைஞர்

புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றுது. இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த பூச்சொரிதல் விழாவில் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ’எல்லாம் வல்ல தாயே’ என்ற பாடலுக்கு, சங்கமம் திரைப்படத்தில் வருவதைப் போன்று தான் பரதம் கற்றுக்கொடுத்த மாணவர்கள் மற்றும் மகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த நேரத்தில், திரைப்படத்தில் வருவது போன்றே நெஞ்சை பிடித்து நாற்காலியில் அமர்ந்தார்.

பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய மாணவ, மாணவிகள் மற்றும் அவரது மகள் ஆகியோர் காளிதாஸ் அமர்ந்த நாற்காலியை நோக்கி வந்தபோது அவர்களுக்கு பெரும் சோகம் காத்திருந்தது. நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே காளிதாஸின் உயிர் பிரிந்ததைப் பார்த்து நிகழ்ச்சியை காணவந்த அனைவரும் கண்ணீர் விட்டனர். பெரும்துயரத்துடன் அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றி வைத்தனர்.

இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸுக்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம்கொண்ட காளிதாஸ், பரத நாட்டியாலய பள்ளிவைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மிருதங்க வித்துவான், மகள் பரத கலைஞர், மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை என கலைக்காக வாழ்ந்த குடும்பம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

’ஆடல் வல்லான்’ என்ற விருது, ’கெளரவ டாக்டர் பட்டம்’, 1000க்கும் மேற்பட்ட ஷீல்டுகள், பதக்கங்கள் என வாங்கியுள்ள காளிதாஸ், வரும் வருடத்தில் ’கலைமாமணி விருது’ கிடைக்கும் என தனது நண்பர்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தார் என அவரது நண்பர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோவிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com