செங்கல்பட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்வது குறித்து முதல்வர் பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தரும்படி தமிழக அரசு கேட்டிருந்தது. மத்திய அரசு இதுவரை அரசின் கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில், தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிப்பு குறித்து முதல்வர் நேற்றையதினம் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலையிலிருந்தே பாரத் பயோடெக் நிறுவன இணை மேலாண் இயக்குநர் சுஜித்ரா இலா தலைமையில் ஐந்து அதிகாரிகள் செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்துவருகின்றனர். தமிழக அரசு சார்பில் தொழில்துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர்.