பிச்சை எடுத்த மூதாட்டி பையில் நகை, பணம், பேங்க் பாஸ்புக்! ஆச்சரியமடைந்த ஊழியர்கள்
புதுச்சேரியில் கோவில் வாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மூதாட்டியை, நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்ற போது அவரது பையில் வங்கி கணக்கு புத்தகம், நகை, ஏராளமான பணம் இருந்ததைகண்டு ஆச்சரியமடைந்தனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ளது ஈஸ்வரன் கோவில். கோவில் முன்பு ஏராளமான பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் கோவில் முன்பு பிச்சை எடுத்து வந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
அதன்படி 80 வயதுடைய மூதாட்டி ஒருவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, மூதாட்டியின் பையில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகள் சாலையில் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த நகராட்சி ஊழியர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியகடை போலீசார், மூதாட்டியின் பையை சோதனை நடத்திய போது, அதில் வங்கி கணக்கு புத்தகம் இருந்தது. அதை ஆய்வு செய்த போது 1 லட்சித்திற்கு அதிகமான பணம் வங்கி கணக்கில் இருப்பது தெரிய வந்தது.
மேலும் மூதாட்டியின் பையில் தங்கத் தோடு, ரேஷன் கார்டு, முதியோர் பென்சன் கார்டு புத்தகம் ஆகியவை இருந்தன. உடனடியாக பாதுகாப்பு கருதி பணம், நகைகளை போலீசார் எடுத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் பெயர் பர்வதம் என்றும், அவர் புதுச்சேரி வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவர் கணவர் இறந்த பின்பு ஈஸ்வரன் கோயில் வீதியில் வந்து பிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.