பருவ மழையை எதிர்கொள்ள எந்த நேரமும் தயாராக இருங்கள்: சுகாதார இயக்குநர் வேண்டுகோள்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்காலத்தில் எந்த நேரமும், எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்கவேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டவாரியாக உள்ளாட்சி அமைப்பினர், வருவாய்த் துறையினர், பேரிடர் மீட்புத் துறையினருடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். மீட்பு வாகனங்கள், மீட்புக் குழு, சுகாதார ஆய்வாளர்கள், இதர சுகாதாரத் துறை பணியாளர்கள், 24 மணி நேரமும் மீட்புப் பணிகளுக்காகத் தயாராக இருக்கவேண்டும். அரசு டாக்டர்கள் எந்த நேரமும் எந்தப் பகுதியிலும் பணியாற்றத் தயாராக இருக்கவேண்டும்.
மருத்துவமனைகள், அரசு சுகாதார மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்த வேண்டும். மேலும், டார்ச் லைட் போன்ற அவசரகால மின் சாதனங்களையும் தயார் நிலையில் வைக்கவேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள், போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். பொதுமக்கள் தங்கவைக்கப்பட உள்ள மீட்பு முகாம்களில் கொரோனா மற்றும் மழைக்கால நோய் பரவலைக் கடுப்படுத்த, மருத்துவக் குழுவினர் வாயிலாக, முகாம்கள் நடத்தப்படவேண்டும்.
புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைக்கால காய்ச்சலைப் பரப்பும் கொசு புழு உருவாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.