‘குற்றம் 23' பட பாணியில் பெண்ணிடம் தகராறு: உயிரணுவிற்காக பணம் கேட்டு மிரட்டியவர் கைது

‘குற்றம் 23' பட பாணியில் பெண்ணிடம் தகராறு: உயிரணுவிற்காக பணம் கேட்டு மிரட்டியவர் கைது
‘குற்றம் 23' பட பாணியில் பெண்ணிடம் தகராறு:  உயிரணுவிற்காக பணம் கேட்டு மிரட்டியவர் கைது

"குற்றம் 23" பட பாணியில் வங்கி பெண் அதிகாரியை மிரட்டி உயிர் அணுவிற்காக ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலைப் பகுதியை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 2017-ஆம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுதா பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே வங்கிக்கு வாடிக்கையாளராக வந்த பெரியமேடு தொப்பை பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ரபியா பஸ்ரின் (38) என்பவருடன் சுதாவிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது கணவரான நாகூர் மீரானும் குடும்ப நண்பர் போல சுதாவுடன் பழகி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சுதா, தான் குழந்தையில்லாமல் தவித்து வருவதை நாகூர் மீரானிடம் கூறி வருந்தியதாகத் தெரிகிறது. இந்நிலையில் நாகூர் மீரான் மற்றும் ரபியா பஸ்ரின் தங்களுக்கு நன்கு தெரிந்த டாக்டரான உமாராணி என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளதாக கூறி அவரிடம் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்களை நம்பிய சுதா, டாக்டர் உமாராணியிடம் சிகிச்சை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் இரட்டைப் பெண் குழந்தையை பெற்றுள்ளார். இதற்காக சுதா, நாகூர் மீரான் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இருப்பினும் நாகூர் மீரான், குழந்தை பிறந்ததற்கு காரணம் தனது உயிர் அணுக்கள்  என்றும் அதனால் தனக்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு சுதா ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று சுதாவின் வீட்டிற்கு வந்த நாகூர் மீரான் சுதாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சுதா எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எழும்பூர் போலீசார் நாகூர் மீரானை கைது செய்தனர். அவர் மீது 294(பி) (தரக்குறைவாக திட்டுதல்), 354 (மானபங்கப்படுத்துதல்), 448 (அத்து மீறி உள்ளே நுழைதல்), 506(2) கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ்
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் மீரானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள் அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

நடிகர் அருண் விஜய் நடித்த "குற்றம் 23" தமிழ் படத்தில் வில்லன் தனது உயிர் அணுக்களை டெஸ்ட் டியூப் பெண்ணுக்கு தானம் செய்து விட்டு குழந்தை பிறப்பதற்கு முன் அந்த பெண்ணை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது போன்ற கதை இருக்கும். அதை போலவே இங்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது வேதையானது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com