நாமக்கல்லில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
குழந்தைகள் விற்பனை தொடர்பான விவகாரம் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இடைத்தரகர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடியினர், குழந்தைகள் விற்பனை தொடர்பாக பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா என்பவரும் இடைத்தரகராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு விரைந்த சிபிசிஐடி காவல்துறையினர், ரேகாவை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரேகாவுக்கு, வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக சந்தேகிக்கும் சிபிசிஐடி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.