தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சென்டிமீட்டர் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென்தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் இடைவெளிவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு காஞ்சிபுரம், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் மழைக்கு பின்னர் சிறிது இடைவெளி விட்டு 28, 29-ஆம் தேதிகளில் மீண்டும் மழை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கடலூர் மாவட்டம் புவனகிரியில் 8 சென்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1 முதல் இப்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்க வேண்டிய நிலையில் 9 சதவிகிதம் குறைந்து 28 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வழக்கமாக 51 சென்டி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும், ஆனால் 30 சென்டிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் இது 41 சதவிகிதம் குறைவு என்றும் அதிகப்படியான பற்றாக்குறை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட 34 சதவிகிதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.