ஆரவாரமாக நடந்து முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - முதலிடம் பிடித்த வீரர்கள் விவரம்
அவனியாபுரம், மதுரை பொங்கல் திருநாளுக்கு கூடுதல் சுவை கூட்டும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஆரவாரமாக தொடங்கின. விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீரர்கள் உறுதிமொழி ஏற்றவுடன் போட்டியை காலை 7 மணியளவில் அமைச்சர்கள் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர். அமைச்சர்களின் பெயரிலும், முக்கிய பிரமுகர்கள் பெயரிலும் மட்டுமின்றி 12 ஆம் வகுப்பு மாணவி வளர்த்த காளை, தலைமைக் காவலர் வளர்த்த காளை என பலதரப்பட்ட மக்களின் காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. 7 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் மொத்தம் 624 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க 300 காளையர்களும் களம் கண்டனர்.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை தழுவி வெற்றி பெற்ற வீரர்கள் தங்க நாணயம், கட்டில், பீரோ, இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். முதல் பரிசு பெற்ற அவனியாபுரம் கார்த்திக்குக்கு காரும், இரண்டாம் இடம் பிடித்த வலையன்குளம் முருகனுக்கு இரு சக்கர வாகனமும், மூன்றாமிடம் பிடித்த பாரத்குமாருக்கு பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டன.
சிறந்த காளைக்கான முதல் பரிசை மணப்பாறை தேவசகாயம் என்பவரது காளை தட்டிச் சென்றது. இரண்டாமிடம் பிடித்த அவனியாபுரம் ராமுவின் காளைக்கு பசுங்கன்றும், மூன்றாமிடம் பிடித்த காளையின் உரிமையாளரான அவனியாபுரம் சேதுராமன் பிரதிஷிற்கு மிதிவண்டியும் பரிசாக வழங்கப்பட்டன.

