(கொலை செய்யப்பட்டவர்கள்)
சென்னை ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி சேக்காட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஜெகதீசன் - விலாஷினி தம்பதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் பணியாற்றிய சுரேஷ் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ஜெகதீசன் - விலாஷினி தம்பதியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
தலைமறைவாகிவிட்ட அவர்களை ஆந்திரா, மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் லட்சுமியை ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுரேஷ் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இருவரும் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.