ஊரடங்கு காலத்தில் கார் வைத்து ஆடு திருடிய இறைச்சி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நெற்புகை கிராமத்தைச் சேர்ந்த இறைச்சி வியாபாரி அழகப்பன்(48). இவர் பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, ஏலக்காய் விடுதி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் கார் வைத்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகப்பனை கைது செய்த போலீசார் அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அழகப்பன் மீது ஏற்கெனவே செம்பட்டிவிடுதி, துறையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆடு திருட்டு சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.