சென்னை கொளத்தூரில் தகாத உறவு விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர்- ரெட்டேரி சிக்னல் அருகே நேற்றிரவு இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடந்த விசாரணையில், கொல்லப்பட்டவர் சிட்லபாக்கம் வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அன்வர் பாட்ஷா (31) என்பது தெரியவந்தது. இவர் லட்சுமி என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும் இதனால் லட்சுமியின் மகன் அஜித்துக்கும் பாட்ஷாவுக்கும் பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு தனது அம்மா மெகபூபா மற்றும் லட்சுமியுடன் ஆட்டோவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் பாட்ஷா. அப்போது அங்கு வந்த அஜித் மற்றும் அவர் நண்பர்கள் பெரிய அஜித், அஷ்வின் ஆகியோர் சேர்ந்து பாட்ஷாவை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.