மத்திய உள்துறை அமைச்சர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில், அமித் ஷா மீது ஒருவர் பதாகையை எறிய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தை விட்டு காரில் வெளியேறிய அமித் ஷா திடீரென்று காரை பாதியில் நிறுத்தி நடைபயணம் செய்தார்.
சாலையின் ஓரத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார். அவருக்கு பாஜக, அதிமுக தொண்டர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஒருவர் அமித்ஷா மீது பதாகையை தூக்கி வீச முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து காரில் பயணத்தைத் தொடர்ந்த அமித் ஷா தற்போது ஆழ்வார்ப் பேட்டையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்தடைந்தார்.