சேலத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில், ரத்த காயங்களோடு பேசிய வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த பழனிசாமி ரத்த காயங்களோடு தன்னை வெட்டியவர்கள் குறித்து தனது செல்போனில் பதிவு செய்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடனடியாக பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஜினி ரசிகரான பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்த விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக சீமானின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக பழனிசாமி புகார் கூறியதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.