அத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவரின் உயிரிழப்பால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 பேர் ஆகியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார். முதல் நாள் முதலே ஏராளமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். ஆனால் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இதனை முதலமைச்சர் பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசித்து செல்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தாலும், வைபவத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த ஜூலை மூன்றாம் தேதி அன்று ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அத்துடன் ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் தாக்கியதாலேயே அவர் இறந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதை மறுத்திவிட்டார். நேற்றைய தினம் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு அறிவித்தார். இந்நிலையில் மேலும் ஒருவர் அத்தி வரதர் வைபவத்தில் உயிரிழந்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த வயதான முதியவர் ஆறுமுகம் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இதனால் இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.