அத்திவரதர் தரிசனம் காண விழாக்கோலம் பூண்டது காஞ்சி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்காக பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வரத் தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எடுக்கப்படுவார். பின்னர் 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடைசியாக கடந்த 1979-ஆம் ஆண்டு அத்திவரதரைத் தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அத்திவரதர் திருவிழா தொடங்கியுள்ளது. இன்றுமுதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாட்கள், பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.
முன்னதாக அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் கடந்த 28-ஆம் தேதி எடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்திவரதருக்கு தைலக்காப்பு, சிறப்பு பூஜைகள் செயப்பட்டன.
அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் மாலை 5 மதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம். கட்டணமில்லா தரிசனம் செய்பவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டண தரிசனம் செய்பவர்களும் கிழக்கு ராஜகோபுரம் வழியாகத் தான் வர வேண்டும். விஐபி தரிசனத்திற்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விஐபிகள் மேற்கு கோபுரம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.